நாளை 26-02-2018 திங்கட்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கீரப்பாக்கம் சீரடி சாய்பாபா நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. சாயி பக்தர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

பஸ் ரூட்: தாம்பரம் முதல் கீரப்பாக்கம் வரை - 55D கூடுவாஞ்சேரி முதல் கீரப்பாக்கம் வரை - 55K

இறங்குமிடம்: மூன்று ரோடு, கீரப்பாக்கம் பாபா கோயில்.

பாபா கோயிலின் கும்பாபிஷேகம் முன்னிட்டு கண்டிகை பேருந்து நிலையம் முதல் இலவச வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. ( தாம்பரம் - கேளம்பாக்கம் வழித்தடத்தில் கண்டிகை உள்ளது)

பாபா அருள் பருக அனைவரும் வருக! வருக!

Saturday, 14 June 2014

கீரப்பாக்கத்திற்க்கு பாபா வந்த தகவல் – பகுதி 7




அதிகாலையில் இந்தச் செய்தியைக் கேட்டதும் எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. ”என்ன ஆயிற்று?” என்றேன்.
”இரவு நன்றாகத்தான் இருந்தார்.. விடிந்து போய் பார்த்தால் இப்படியாகியிருக்கிறது”  என்றான்.
உள்ளூரிலிருந்த எனது மற்ற தம்பிகளுக்கு போன் செய்தபோது, அவர்களுக்கு தகவல் தெரியவில்லை. நான் சொன்னபிறகுதான் விக்ஷயமே தெரிந்தது.
குடும்பத்தோடு தனியாக வாடகைக் கார் அமர்த்திக்கொண்டு புறப்பட்டேன்.
காஞ்சீபுரத்தை தாண்டவில்லை. கார்த்திக் போன் செய்து, ’கீரப்பாக்கத்தில் கட்டிவந்த நமது அன்னதானக் கூடம், ஆலய அமைப்பு ஆகியவற்றை யாரோ விக்ஷமிகள் இடித்து விட்டார்கள்’  என்று போன் செய்தார்.
’வந்து பார்த்துக்கொள்கிறேன் எனக்கூறிவிட்டு பயணத்தை தொடர்ந்தேன்.
’உனக்கு இந்த கட்டிடம் வேண்டுமா? அந்தக் கட்டிடம் வேண்டுமா? எனக் கேட்கிறார்கள். நீயாக இருந்தால் என்ன செய்திருப்பாய். நீ ஒரு முட்டாள்..எனக்கு அந்தக் கட்டிடம் தான் வேண்டும் என்றிருப்பாய். ஆனால் எனக்கு இந்தக் கட்டிடம் தேவைப்படுகிறது. அதனால் இதை வேண்டும் எனக்கேட்டேன்1’ என்று பாபா கூறியது நினைவுக்கு வந்தது..
நான் பாபாவிடம் கேட்டேன். ’சரி,  நீ கோயில் கட்டிடத்தை இடிக்க ஒப்புக் கொண்டாய் என்றால், என் தம்பி எதற்காக இறக்கவேண்டும்?
அவரிடம் கேள்வி கேட்கமுடியுமா? என்ன? காரணகாரியத்தோடுதானே வேலை செய்வார் என நினைத்தபடி ஊருக்குச் சென்றேன்.
ஈமக் கிரியைகளை முடித்துக்கொண்டு சென்னை வந்த போது, எனது அன்புக்கும் மரியாதைக்கும் உரிய பாபா மாஸ்டர் அருணாசலம் ஐயா அவர்கள் மருத்துவ மனையில் உடல் நலமின்றி இருக்கும் தகவல் வந்தது.
மனிதர்களில் சிறந்தவர் என அவரை மதிப்பேன். எளிமைக்கு எடுத்துக்காட்டாக வாழ்பவர் அவர். யார் அழைத்தாலும் உடனே சென்றுவிடுவார். கொடுக்கிற உணவை உண்டு அவர்களை வாழ்த்துவார்.
சில நாட்களுக்கு முன்பு, திடீரென என்னைப்பார்க்க வந்துகொண்டிருப்பதாகக் கூறியிருந்தார். அப்போது கீரப்பாக்கம் மலையடிவாரத்தில் இருந்தேன்.
காரிலிருந்து இறங்கி வரும் அவரை தூரத்திலிருந்து பார்த்தபோது, மிகவும் சோர்வாக இருந்தார். அவர் வந்ததும் கைலாகு கொடுத்து அழைத்துச் சென்றேன்.
’உடம்பைப் பார்த்துக்கொள்ளுங்கள். மிகவும் மெலிந்து சோர்வாக இருக்கிறீர்கள்! என்றேன்.
”ஒரு வாரமாக காய்ச்சலில் படுத்திருந்தேன்..இப்போது, எனக்கு வேண்டிய வெங்கட்டின் தங்கை மகனுக்கு ஒரு பள்ளியில் இடம் தேவைப்படுகிறது. உங்கள் உதவியை நாடி நேரிலேயே வந்தேன்!”  என்றார்.
பக்தர்கள் மீது அவருக்கு அவ்வளவு பரிவு!
இதை போனிலேயே சொன்னால் போதாதா? இவ்வளவு சிரமப்பட்டு வரவேண்டுமா? எனக் கேட்டு, அதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருவதாகக் கூறி அனுப்பி வைத்தேன். அதன் பிறகு, ஐயா மருத்துவ மனையில் இருக்கிறார் என்ற தகவல்தான் வந்தது.
அவரது பேத்தி, இவரது படுக்கை அருகே, சொப்பு வைத்து விளையாடிக் கொண்டிருந்திருக்கிறாள். அப்படியே உறங்கச் சென்றுவிட்டாள். மறுநாள் காலை பால்காரன் வாயிலில் வந்து, அம்மா பால் என குரல் கொடுத்துள்ளார். அனைவரும் உள்ளே உறங்கிக்கொண்டிருக்க, ஹாலில் படுத்திருந்த மாஸ்டர், பால் வாங்கி வைக்க நினைத்து எழுந்தபோது, பேத்தி விட்டுச் சென்ற சொப்புச் சாமானில் கால் வைத்துவிட, அது, வழுக்கி, இழுத்துச் சென்றுவிட்டது. நிலை தடுமாறிய மாஸ்டர் கீழே விழுந்து விட்டார்.
சத்தம் கேட்டு ஓடி வந்த அவரது குடும்பத்தார் முதல் உதவி செய்து மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். கொல்லி மலை சித்தர் சந்துரு சுவாமிகள் உடன் வந்திருக்கிறார். இடுப்பு எலும்பு முறிந்துவிட்டதாகக் கூறியிருக் கிறார்கள். சென்னையில் ஒரு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு பரிசோதித்துப் பார்த்தபோது, எலும்பு முறிவில்லை, பந்துக்கிண்ண மூட்டு விலகியிருக்கிறது என்பது தெரியவந்தது.
ஒரு வாரத்திற்குப் பிறகு குணமடைந்து தன் மகள் வீட்டுக்குப் புறப்பட்டார். போகும் வழியில் கார் ஓட்டுநருக்கு சர்க்கரைச் சத்துக் குறைவு ஏற்பட்டு, மயங்கி
விட, கார் தாறுமாறாக ஓடியிருக்கிறது. எப்படியோ உயிர்ச் சேதம் தராமல் நின்றுபோன அந்தக்காரிலிருந்தபடியே, தனது சீடர்கள் ராசூஜந்திரன், குமரேசன் ஆகியோருக்குப் போன் செய்து அவர்களை வரவழைத்துள்ளார். இவர்கள் இருவரும் வந்து பத்திரமாக பாபா மாஸ்டரை அழைத்துச் சென்று அவரது மகள் வீட்டில் ஒப்படைத்துவந்திருக்கிறார்கள்.
உலகத்தில் பிறந்தவர்களுக்கு, நல்ல பிள்ளைகள் அமைவதும், கடவுளுக்கு நல்ல பக்தர்கள் அமைவதும், குருவுக்கு நல்ல சீடர்கள் வாய்ப்பதும் குறைவு. ஆனால், பாபா மாஸ்டர் கொடுத்து வைத்தவர். நல்ல பிள்ளைகள், நல்ல சீடர்கள், நல்ல பக்தர்கள் என இறைவன் அவருக்கு அமைத்துக் கொடுத்திருக்கிறான்.
குமரேசன், ராசூஜந்திரன் போன்ற சாயி பக்தர்களை பார்ப்பது அரிது. அத்தகைய அன்புள்ளமும், தயாள சிந்தனையும் உள்ளவர்கள் அவர்கள்.
பாபா மாஸ்டர் அருணாசலம், 78 வயது நிரம்பியவர். இத்தனை வயதுவரை ஓய்வில்லாமல் உழைப்பவர்.
பல ஆலயங்கள் உருவாக, அந்த ஆலயங்கள் வளர்ச்சி பெற இவரது அயராத உழைப்பு முக்கியம். இவரது ஆலயத்தில் பணி செய்தவர்கள், புது ஆலயம் எழுப்பியபோதெல்லாம் கூட, பொறாமைப்படாமல், அவர்களை வாழ்த்தி, அவர்களது ஆலய வளர்ச்சிக்கும் பாடுபட்டவர் ஐயா அவர்கள்.
                                                                                                                               தொடரும்......

No comments:

Post a Comment